Blog Archive

Sunday, April 21, 2024

2822 முழுமை பெற்ற காதல் எல்லாம்.....3




வல்லிசிம்ஹன்
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.







கும்பகோணம் ரயில் நிலையத்தில்  மக்கள்
கூட்டமும் விடாமல் பெய்த மழையும் 
சத்தம் போட்ட வண்ணம் இருந்தன.

நீலாவின் பெற்றோர் அவர்களது உறவினர்கள் கல்யாண
தம்பதி பெண் தோழி மாப்பிள்ளைத் தோழன்
என்று கலாட்டாவுக்குப் பஞ்சம் இல்லை.

ஜானியும் முதல் நாள் காவிரி பொங்கி வந்த வேகம்
எல்லோரும் தப்பித்து வந்த கதை என்று
நண்பர்களிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் 
கொண்டிருந்தான். 
அவ்வப்போது நீலாவைத் தேடி கண்கள் ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நடுவில் கடந்த சில வருடங்கள் எப்படி ஒரு
பெண்ணை இவ்வளவு அழகாகச் செதுக்கி இருக்கிறது.?

 நீலாவும் அந்தப் பார்வைகளைத் தவிர்க்க முயற்சித்து
விட்டு விட்டாள். 
என்ன இந்த உணர்ச்சி என்றே புரியாமல்
அவஸ்தையாக இருந்தது. நம்ம ஜானி  தானே
வித்தியாசமாக ஏன் தோன்றுகிறது.
இதோ ரயில் வரப் போகிறது,
ஒரே வண்டியில் போனாலும்  திருச்சியில் இறங்கி
விடுவான். பின் எப்பவோ. நாமோ சென்னையில் கல்லூரியில்
சேரப் போகிறோம்.
போகாத ஊருக்கு வழி தேடாதே என்று மனதைக் கடிந்தாள்.

வெள்ளம் வந்ததும் ஜானி அவளைப் பத்திரப் படுத்தியதையும் நினைக்கும் போதே
அவளுக்குக் கண்ணில் நீர் கட்டியது.
அந்த மாலை அனைவரும் சேர்ந்து 
புதிதாக வந்திருந்த சிவகுமார் அம்பிகா படம் ஒன்றைப்
பார்க்கப் போனார்கள். நான் பாடும் பாடல் என்று பெயர்.

கொஞ்சம் சோகம் கொஞ்சம் மகிழ்ச்சி திருப்பம்
மைக் மோஹன் பாடுவது எல்லாமே அவர்களுக்குப்
பிடித்தது.
திரும்பி வரும்போது எல்லார் நினைவிலும் ';பாடும் வானம்பாடி வா''
பாட்டே மனதைச் சுற்றி வந்தது.
''சே இந்த எஸ்பி பி ஸாருக்குத் தான் என்ன ஒரு குரல்.!"
என்று பேசாதவர்கள் இல்லை.

இதோ மீண்டும் யார் பாடுகிறார்கள் ?என்று திரும்பினால்
ஜானி நிற்கிறான் அருகே.
நீலா!! இந்த வருஷ கல்ச்சுரல்ஸில் 
ஐயா இந்தப் பாட்டாலயே ஜெயிக்கப் போகிறேன்
என்று சிரித்தபடி சொன்னான் ஜானி.

அவளும் விட்டுக் கொடுக்காமல் ''நானும் 
எதிராஜ் கல்ச்சுரல்ஸில் உங்க கல்லூரியை 
ஜெயிக்கிறேனா இல்லையா பாரு'' என்றாள்.


 ப்ளாட்ஃபார்மில் பரபரப்பு அதிகரித்தது.
ஜானி , நீலா குடும்பத்தைக் கவனித்துப் பத்திரமாக
ஏற்றி விட்டான். அனைவரும் அவரவர் பர்த்தில் அமர்ந்ததும்

'' மாமா, நான் திருச்சியில் 10 மணிக்கு இறங்கி விடுவேன்.
அப்புறமா ஜூலை மாதம் பாட்டியைப் பார்க்க சென்னை 
வருவேன். நீங்களும் அதற்குள்
மாற்ற்லாகி வந்துடுவீர்களா? '' என்று கேட்டான்.

ஆமாம் பா நீலா காலேஜ் ல சேரணும்  அவள் தங்கை ப்ளஸ்1
சேரணும். வீடு பார்க்கணும். மே மாதம் சென்னை வந்து விடுவோம்.
நீ பத்திரமாகப் போய் வா" என்றார்.

வரேன் மாமி, வரேன் நீலா, மாலா.சீ யூ என்றபடி விடை பெற்றான் ஜானி.
அப்புறம் சந்தித்தார்களா என்பதை அடுத்தாற்போல்
பார்க்கலாம்.  தொடரும்



Friday, April 05, 2024

முழுமை பெற்ற காதல் எல்லாம்.......பகுதி 2

வல்லிசிம்ஹன்
   எல்லோரும் வளமாக வாழ வேண்டும்


சில வருடங்களுக்கு முன் எழுதிருந்த கதையில் ஆரம்பித்தது ஜானகிராமன் மற்றும்
நீலாவின் இளவயது ஈர்ப்பு.
திண்டுக்கல்லில் நடப்பதாக எழுதி இருந்தேன்.

நீலாவுக்கு 14 , ஜானகிராமன் ''ஜானி''க்கு 16.

இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து வீடு,
   ஜானியின் தங்கையும் நீலாவும் பள்ளித் தோழிகள்.

1978இல் ஆரம்பித்த நட்பு, நீலாவின் அப்பாவுக்கு
 செங்கல்பட்டுக்கு மாற்றல் ஆனதும்
சில வருட கடிதப் போக்குவரத்துடன்  தொடர்ந்தது. 1984கலாவின் அக்கா திருமணத்துக்கு
நீலாவும் பெற்றோர்களும் போயிருந்தார்கள்.
தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரையில்
திருமணம் படு உத்சாகமாக நடந்தது. அப்போதுதான் இருவரும் 
ப்ளஸ் 2 பரீட்சைத் தேர்வுகள் எழுதி முடித்திருந்த உத்சாகம்.

ஜானி திருச்சி சைண்ட் ஜோசஃபில் பி.காம் இரண்டாவது
ஆண்டில் படித்துக் கொண் டிருந்தான்.....

தஞ்சாவூர் மண்ணில் ஜானி ,நீலா இருவருக்கும் பது உணர்வுகள்
நினைப்புகள் தோன்றின. கல்யாண கோலாஹலங்களில்
நிறைய தருணங்களில்  பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது,

கலா, நீலா, ஜானி இன்னும் இரண்டு பொடிசுகள் என்று 
மலர்கள், மாலைகள், ஜமக்காளங்கள், மாப்பிள்ளைக்குக் குடை, பாய்
என்று  கலாவின் சித்தப்பா வண்டியில்
போய் வந்த வண்ணம் இருந்தார்கள்.கவலையின்றிக் குதூகலமாக அப்போது வந்த திரைப் படப் பாடல்கள்
பின்னணியில் ஒலிக்க நேரம் நிற்காமல் ஓடியது!!!!!

திருமணம் இனிது நடை பெற்றது.
மதிய வேளையில் திருமணத்தில் சேர்த்து வந்திருந்த பாலிகைகளைக்
காவேரியில் கரைக்க மகளிர் திரண்டனர். 
நாயனக்காரர் நையாண்டி வாசிக்கப் பெண்கள் குழாம்
மெதுவாக மணல் திட்டில் ஏறிக் கொண்டிருந்தனர்.

கூடவே காளைகள் குழுவும்.பெண்களுக்குப் பாதுகாவலாம்.:))))))))))
சந்தனம் கதம்பம் பன்னீர்  தெளிப்பு என்று 
ஒரே மயக்கக் கலவையாக விளங்கியது அந்த மதிய மாலை நேரம்.

ஆற்றில் காவிரி வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் குறுகலாகக் காணப்படும் வெண்ணாறு
அன்று அகலமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. 


ஜானிக்கு இந்தப் பெண்கள் படை இத்தனை உத்சாகமாகக்
காவிரியை நோக்கிப் பாய்வது நயத்தைக் கொடுத்தது.

கரையோரம் ஆழம் இருக்கும் ஜாக்கிரதை என்றவாறே 
பின்தொடர்ந்தான்.
அவர்கள் அவனை லக்ஷியம்  செய்யவில்லை.
பாவாடைகள் நனையும் போது அவர்களுக்கு ஆற்றுன் வேகம் 
தட்டுப் பட்டது. 
அதே சமயம் எதிர்க்கரையில்  தம்பட்டம் அடிப்பவர் ஒருவர்
அதிவேகமாகத் தட்டியபடி
''
பிள்ளைகளா ஓடுங்கள்,
வெள்ளம் வருகிறது. அணை திறந்துவிட்டார்கள்''
என்று அலறியபடியே இருந்தான்.
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீர் 
கால்களை இழுப்பது தெரிய அலற ஆரம்பித்தனர்.


ஜானியும் உடன் வந்த அவன் வயது பசங்களும்
இந்த 7, 8  சிறுமிகளைப் பத்திரமாகப் பிடித்துக் 
கரைக்குக் கொண்டுவந்தனர்.
கண்முன்னால்  மரமும் செடிகளும் ஆடுகள் என்று 
வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடுவதைப் 
பார்த்துப் பிரமித்தனர் வந்த பெண்கள்........தொடருவோம்.




Tuesday, April 02, 2024

முழுமை பெற்ற காதல் எல்லாம்..... part 1

வல்லிசிம்ஹன்

Foreword.
ஏற்கனவே ஆரம்பித்த கதையை சுபமாக 
முடிக்க முடியாமல் கதை நாயகி மன நல மருத்துவரிடம்

ஆலோசனை பெற்று வருகிறாள்.பெரியவன் அடுத்த
வருடம் கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும்

பிரியலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள்.
அவர்களின் சின்ன மகள் இப்போது 8 வயதை  நெருங்கிய நிலையில்
பாட்டி தாத்தாவிடம் ஒப்படைக்கப் படுவாள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நூறு வருடப் பழைய வீடு ''சம்பகா''

எல்லோரும் நிறைவுடன் வாழ வேண்டும்.

சென்னையின் ஹெரிடேஜ் வாக் நடத்தும் திரு ஸ்ரீராம் அவர்களின்
விளம்பரம்  மைலாப்பூர் பேப்பரில் வந்ததும்
முதலில் பார்த்தது  தான் நீலாதான்
உடனே ராணி மேரியில் தன்னுடன் படித்த 
சந்திராவுக்கு அழைப்பு விடுக்க அவளும் தானும் தன் பழைய
கல்லூரித் தோழனும் வருவதாகச் சொல்லி மூவரும் 
பதிவு செய்தார்கள்.

முன்பு நடந்த அடையார் வாக், சென்னை பல்கலைக் கழகம் எல்லாவற்றையும் 
தெரிந்து வைத்துக் கொண்டாள்.

இந்த வருடப் பயணம் மகிழ்ச்சி தருவதாக
இருக்கப் போகிறது என்று புது உணர்வு வந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 முன்பு 12 வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் கதை ஒன்று
எழுதி இருந்தேன். அதே ஜானகிராமன்  நீலா கதை
இங்கே தொடர்கிறது.
அதுவும் நடந்ததுதான். இப்போது எழுதுவதும் நடந்தது தான்.
ஊர் பெயர்கள் கொஞ்சம் மாறி இருக்கும்.
இனி மீண்டும் கதையைச் செதுக்கலாம்:)


ஜானகிராமன்60, இப்போது ரிடயர்ட் பாங்க் மானேஜர்.   தனிமரம்........
நீலா 58 திருமணம்,குழந்தைகள்,கணவன் மறைவு, பேரன் பேத்தி
என்று தொடர்ந்த வாழ்க்கை ,மாற்றம் வேண்டி
சென்னைக்குத் திரும்பிய நிலை.

சந்திராவும் கணவர் சுந்தர்,அவளுடைய பழைய நாள் தோழன்
பாலு மூவரும்  ஞாயிறு காலை எட்டுமணி அளவில்
மயிலை கபாலீஸ்வரர் கோவிலை
வந்து சேர்ந்தனர்.
அங்கே ஏற்கனவே சேர்ந்திருந்த நண்பர்களைச்
சந்திக்க விரைந்தாள். 
 செல்ஃபோன்  பாட ஆரம்பித்தது. நீலா அழைப்பதை உணர்ந்து 
''எங்கே இருக்கப்பா, சீக்கிரம் வா'' என்று வேண்டுகோள் 
விடுத்தாள். மயிலையைச் சுற்றிப் பல இடங்களுக்குப் போவதாக
ஏற்பாடு. லிஸ்ட் படி, மாடவீதி, கச்சாலீஸ்வரர் கோவில்,
கேசவ பெருமாள், முண்டகக் கண்ணி அம்மன், சமஸ்கிருதக் 
கல்லூரி, கலைமகள் அலுவலகம்,சாந்தோம் சர்ஸ், லஸ் சர்ச் சாலை எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வதாக 
நிகழ்ச்சி நிரல் சொல்கிறது.

எல்லாரும் வந்தாச்சா என்று இன்னோரு வயதானவர் கேட்க
''ஜானியைக் காணோமே'' என்று இன்னோரு நண்பர் சொல்ல
நீலாவுக்கு ஒரு ஏதோ ஒரு நினைவு தட்டியது.

என்ன பெயர், என் கல்லூரித் தோழி பெயர் கூட ஜானிதான்
என்று ஆவலுடன் தலையைத் திருப்பினாள்.
வந்தது அவளுடைய ஜானி இல்லை ஜானி என்கிற ஜானகிராமன்!!!

''எல்லோரும் தங்களை அறிமுகப் படுத்திக்
கொள்ளலாம் என்று குழுத்தலைவர் சொல்ல
அங்கு கூடி இருந்த 30 பேரும் தங்களுக்குக் கொடுத்திருந்த
பெயரட்டையுடன் இருந்த குழு அடையாளச் சங்கிலியை கழுத்தில் அணிந்து

எளிமையாக அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
ஜானகிராமனைப்  பார்த்ததிலிருந்து நீலாவுக்கு,  இருந்த துளி சந்தேகம்
அவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும்
சட்டென்று விலகியது.
உடம்பில் ஒரு பரபரப்பு வந்தது. 
43 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சந்திப்பா?

தன் முறை வந்ததும், பிறந்த இடம், இப்போது இருக்கும் இடம்
சொல்லிவிட்டு ஜானகிராமனைப் பார்த்துப்
புன்னகைத்தாள்.
அவர் திகைப்பிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை.

ரொம்ப காலமாச்சு பார்த்து என்றபடி அருகில்
வந்தவர் ''நீங்கள் நிறைய மாறிவிட்டீர்கள்'' என்றார்.


அடுத்த சுவாரஸ்யத்தை இரண்டு நாட்களில் தொடர்கிறேன்.